கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் கொலைக் குற்றவாளி ஆனந்த். இவரது வழக்கில், முதலில் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது உயர்நீதிமன்றத்தால் 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனந்த் ஏற்கனவே 6 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார். இந்நிலையில், ஆனந்தின் தாய் ரத்தினம்மா மற்றும் அவரின் காதலி நீதா ஆகியோர் இணைந்து, ஆனந்துக்கு பரோல் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், ஆனந்தை கடந்த 9 ஆண்டுகளாக நீதா காதலித்து வருவதாகவும், தற்போது 30 வயதான அவருக்கு வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு நடப்பதால், தன்னை திருமணம் செய்துகொள்ள ஆனந்துக்கு பரோல் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையின்போது பேசிய அரசு கூடுதல் வழக்கறிஞர், ‘திருமணம் செய்துகொள்வதற்காக பரோல் வழங்குவதற்கு எந்த விதியும் இல்லை’ என நீதிமன்றத்தில் கூறினார். இருப்பினும் நீதிபதி எம். நாகபிரசன்னா, ‘குற்றவாளி வேறு ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள விரும்பினால் அது வேறு சூழ்நிலையாகக் கருதலாம். ஆனால் இந்த அசாதாரண சூழலில் கைதியை பரோலில் விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இல்லையெனில் அவர் தன் வாழ்க்கையில் அன்பை இழக்க நேரிடும்’ எனக் கூறி ஆனந்த் தன் காதலியை திருமணம் செய்துகொள்ள 15 நாள்கள் அவரை பரோலில் விடுவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து, இன்று (ஏப்ரல் 5) முதல் 20ஆம் தேதி மாலை வரை ஆனந்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் செல்பவர் சிறைக்குத் திரும்புவதை உறுதி செய்யவும், பரோல் காலத்தில் அவர் வேறு எந்தக் குற்றத்தையும் செய்யக் கூடாது என்பதற்காக வழக்கமாக விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.