சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பேயன்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நந்தகுமார் (26) என்ற வாலிபர், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கூலித் தொழிலாளியான இவர், ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஜெயராமன் கொலை வழக்கில் நந்தகுமார் தொடர்புடையவர் என்பதாலும், அவர் சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார் என்பதாலும், பழைய பகையால் எதிர்த்தரப்பினர் இவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் குன்றக்குடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் நடந்த தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதான ‘மண்டை ஓடு’ பாண்டி என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அகோரி போன்ற தோற்றம் கொண்ட இவர், நள்ளிரவில் சுடுகாட்டில் பூஜை செய்வது மற்றும் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில், மண்டை ஓடு பாண்டியின் வீட்டிற்குச் சென்ற நந்தகுமார், அவரிடம் கஞ்சா கேட்டுத் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாண்டி தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியால் நந்தகுமாரின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
கழுத்தில் பலத்த காயமடைந்த நந்தகுமார், அங்கிருந்து தப்பிப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார். ஆனால், ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கம் ஏற்பட்டதால், சிறிது தூரத்திலேயே வண்டியுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த மண்டை ஓடு பாண்டியை போலீசார் கைது செய்தனர். பழிக்குப் பழி கொலையாக இருக்கக்கூடும் என நினைத்த நிலையில், கஞ்சா போதையில் நடந்த இந்த மோதல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இதெல்லாம் தேவையா..? செங்கோட்டையனுக்காக கண்ணீர் விடுகிறேன்..!! வறுத்தெடுத்த திண்டுக்கல் சீனிவாசன்..!!



