தனக்கு பிடித்த இரண்டரை ஏக்கர் நிலத்தை, விலைக்கு கேட்டும் தர மறுத்ததால், வீடு புகுந்து எய்ட்ஸ் ஊசி போட்ட போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தையும், மாற்று திறனாளி மகனும் நடுரோட்டில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகன் வெங்கடேசபெருமாள் (24). இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், போலி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு போலி மருத்துவர் செல்வகுமார், ஏழுமலையிடம் இரண்டரை ஏக்கர் நிலத்தை தனக்கு கொடுத்து விடு என்று கேட்டதாகவும், ஆனால் ஏழுமலை நிலத்தை கொடுக்க மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஏழுமலையைப் பழிவாங்கும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏழுமலை வீட்டில் மாற்றுத் திறனாளி மகன் வெங்கடேச பெருமாள் தனியாக இருந்த போது செல்வகுமார், வெங்கடேச பெருமாளிடம் உன்னுடைய அப்பா, உனக்கு ஊசி போட சொல்லி இருக்கிறார் என்று கூறி ஏழுமலை மகனுக்கு ஊசி போட்டதாக தெரிகிறது.

பின்னர் வீட்டுக்கு வந்த அப்பாவிடம் மகன் வெங்கடேச பெருமாள் மருத்துவர் எனக்கு ஊசி போட்டார் என கூறியுள்ளார். பின்னர் செல்வகுமாரை தொடர்பு கொண்டு என்னை கேட்காமல் ஏன் என் மகனுக்கு ஊசி போட்டாய்? என ஏழுமலை கேட்டுள்ளார். அதற்கு செல்வகுமார் சரியாக பதில் அளிக்காமல் போனை துண்டித்துள்ளார். அதன் பின் 2019ஆம் ஆண்டு ஏழுமலையின் மகன் வெங்கடேச பெருமாளுக்கு ஊசி போட்ட இடத்தில் கட்டி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேச பெருமாளுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை, “எங்கள் வீட்டில் யாருக்கும் எய்ட்ஸ் இல்லை எப்படி என் மகனுக்கு எய்ட்ஸ் வந்தது” என கேட்டுள்ளார்.

இந்நிலையில், போலி மருத்துவர் செல்வகுமார் செலுத்திய ஊசி மூலமாகத் தான் எய்ட்ஸ் நோய் பரவியது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பலன் இல்லாததால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் புரண்டு தன்னுடைய மகனுடன் ஏழுமலை போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.