மனைவியின் ஒப்புதலுடன் முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடித்தனம் நடத்திய புது மாப்பிள்ளை, 2 மனைவிகளின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முதல் மனைவியின் ஒப்புதலோடு, முன்னாள் காதலியை 2-வது திருமணம் செய்து கொண்டவர் டிக்டாக் பிரபலம் கல்யாண். இந்த இளைஞரின் 2-வது திருமண வீடியோ, கடந்த வாரத்தில் டிரெண்டிங் ஆகி சிங்கிள் பசங்களின் சாபத்தை பெற்றுக் கொடுத்தது. முதல் மனைவி விமலாவுக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் ஊர் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்ட விமலா, தனது கணவருக்கு நித்ய ஸ்ரீயை, 2-வது திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த விவகாரம் நித்ய ஸ்ரீக்கு தெரியவந்ததால், இவருக்கும் முதல் மனைவி விமலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஒரே வீட்டில் ஒன்றாக அந்த இளைஞருடன் சேர்ந்து குடித்தனம் நடந்த வேண்டும் என்ற இந்த ஜோடிக்கிளிகளின் ஒப்பந்தத்தில் கீறல் விழுந்துள்ளது. ரெட்டை ரோசாக்களுடன் ஒரே வீட்டில் உற்சாகமாக ஊஞ்சல் ஆட நினைத்த அந்த காதல் ராசாவிடம், விமலாவை அவளது முதல் கணவனுடன் அனுப்பி வையுங்கள் என்று கூறி 2-வது மனைவி நித்யஸ்ரீ சண்டையிட்டதாக கூறப்படுகிறது. விமலாவும், நித்யஸ்ரீயும் அந்த இளைஞரிடம் கடுமையாக சண்டையிட்டதால், இதோ வருகிறேன் என்று கூறி சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. நித்யஸ்ரீயை சந்திக்கவும் வரவில்லை. முதல் மனைவி விமலா வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் தாலி கட்டி தலைமறைவான கணவனை இரண்டு மனைவிகளும் தீவிரமாக தேடி வருகின்றனர்.