இந்தியாவிலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சன் டிவி குழுமம் திகழ்கிறது. 1993-ம் ஆண்டு முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ரூ.24,000 கோடி மதிப்பு கொண்ட மிகப்பெரிய மீடியா குழுமமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சன் டிவியின் அதிபரான கலாநிதி மாறனுக்கும் அவரின் சகோதரரும் எம்.பியுமான தயாநிதி மாறனுக்கு இருக்கும் மனக்கசப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது கலாநிதி மாறன் மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை வாங்கிவிட்டதாக தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 2003 ஆம் ஆண்டு தனது மூத்த சகோதரரும் ஊடக அதிபருமான கலாநிதி மாறன், சன் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 12 லட்சம் பங்குகளை வெறும் 1.2 கோடிக்கு வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் அவற்றின் உண்மையான மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய் என்றும் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தங்கள் தந்தையுமான முரசொலி மாறன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது இந்த பரிவர்த்தனைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. முரசொலி மாறன் 2002 ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து 2003 நவம்பர் மாதம் இறக்கும் வரை கோமா நிலையில் இருந்தார்.
“நவம்பர் 26, 2003 அன்று எந்தவொரு தரப்பினருக்கும் சட்டப்பூர்வமான இறப்புச் சான்றிதழ் அல்லது சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் கிடைத்திருக்க முடியாது. இந்த மோசடி பரிமாற்றம் செல்லாது” அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது..
சன் டிவியின் சொந்த நிதியைப் பயன்படுத்தி தனது அத்தை தயாளு அம்மாளிடமிருந்து ரூ.100 கோடிக்கு பங்குகளை வாங்கியது உட்பட, நிறுவன நிதியைத் திசைதிருப்ப கலாநிதி இந்தக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தியதாக தயாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு நிதியளிப்பதற்காக நிறுவனத்தின் முதல் ஈவுத்தொகை 2005 ஆம் ஆண்டு மோசடியாக அறிவிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்..
2003 ஆம் ஆண்டு முரசொலி மாறன் இறந்ததைத் தொடர்ந்து, இறப்புச் சான்றிதழ் அல்லது சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் போன்ற முறையான சட்ட ஆவணங்கள் இல்லாமல் பங்குகள் அவர்களின் தாயார் மல்லிகாவுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
2024 அக்டோபரில் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இது இரண்டாவது முறையாகும். இந்த நோட்டீஸை தொடர்ந்து இன்று சன் டிவி குழும பங்குகள் 4% சதவீதம் வரை சரிவை சந்தித்தது.
இந்த நிலையில் தயாநிதி மாறனின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று சன் டிவி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மும்பை, பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு சன் டிவி நெட்வொர்க் கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் “ சன் குழுமம் தொடர்பாக வந்திருக்கும் செய்திகள் ஆதாரமற்றவை.. இந்த புகார்கள் அனைத்து 22 ஆண்டு பழமையானது.. மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவதூறானவை. வெறும் ஊகத்தின் அடிப்படையில் அவதூறு பரப்பும் வகையில் தவறாக பரப்பப்படுகிறது.
பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருந்த போது நடந்த பரிமாற்றங்கள் சட்டப்பூர்வமானவை. இது குடும்ப விவகாரம் மட்டுமே. இதற்கும் வர்த்தகத்திற்கும் தொடர்பில்லை. தனிநபர் சார்ந்த விஷயம் மட்டும் தான். இது வர்த்தகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.