கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தேவரஹிப்பராகி பகுதியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரபு ரத்னாகர் (50), தனது குடும்பச் செலவுகள் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்காக அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒருகட்டத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடி முற்றியபோது, தனது மனைவி சரோஜினியின் (45) பெயரிலும் கடன் வாங்கியுள்ளார். இந்த நிதி மேலாண்மை சிக்கலால் அந்த இல்லத்தில் நிம்மதி மறைந்து, தினந்தோறும் சண்டை சச்சரவுகள் அரங்கேறி வந்துள்ளன.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, வழக்கம்போல கடன் விவகாரம் தொடர்பாக தம்பதியிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பிரபு, வீட்டிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்துச் சரோஜினியைத் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரோஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், வீட்டின் தரைப்பகுதியைத் தோண்டி, மனைவியின் உடலை அங்கேயே புதைத்துவிட்டு, எப்போதும் போல சுற்றித் திரிந்துள்ளார்.
பின்னர், மனைவி காணாமல் போய்விட்டதாக தனது மகனிடமும் உறவினர்களிடமும் ஒரு மாத காலமாகப் பிரபு நாடகமாடி வந்துள்ளார். இருப்பினும், அவர் தேடுவதை போல நடித்த விதம் மற்றும் அவரது நடவடிக்கைகளில் நிலவிய அசாதாரணமான அமைதி உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸாரின் பார்வை பிரபுவின் பக்கம் திரும்பியது. ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய பிரபுவின் உடல்மொழி அவர் ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைப்பதை உறுதிப்படுத்தியது.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், உடைந்து போன பிரபு, கடன்காரர்களின் டார்ச்சரால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியைக் கொன்று புதைத்த கொடூர உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வட்டாட்சியர் முன்னிலையில் வீட்டின் தரைப்பகுதி தோண்டப்பட்டு சரோஜினியின் சிதைந்த உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபு ரத்னாகரை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
Read More : “என்ன செய்தாலும் வேலைக்கு ஆகல”..!! அரசியலில் இருந்து ஒதுங்கும் ராமதாஸ்..? அதிர்ச்சியில் பாமகவினர்..!!



