அகமதாபாத் ஏர் இந்திய விமானம் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறி கிடப்பதால், அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருப்பதாக உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் கூறுவது காண்போரை கண்கலங்க வைக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI171), நேற்று (ஜூன் 12) புறப்பட்ட சில விநாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது. விமானம் வானில் புறப்பட்ட 30 விநாடிகளுக்குள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், விமானத்திலிருந்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விமான தரையில் விழுந்ததிலும், 28 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினர், விபத்தில் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஏனென்றால், தீக்காயங்களுடன் உடல்கள் சிதறி கிடப்பதால் “பல சடலங்கள், அடையாளம் காண முடியவில்லை. எங்களது குடும்ப உறுப்பினர்கள் யார், எங்கு என்று கூட தெரியவில்லை,” என்று கதறுகின்றனர்.
அந்தவகையில், இந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினரான தன்வீர் மாலிக், தனது துயரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார், “நான் பரோடாவைச் சேர்ந்தவன். காலை 11 மணியளவில் என் மாமியாரை இறக்கிவிட்டு பரோடாவுக்குத் திரும்பினேன்,. வீட்டிற்கு சென்று செய்தியைப் பார்த்து விமானம் பற்றி விசாரித்தேன். அவர்கள் ஏறிய அதே விமானம் அது என்பதை அறிந்தேன். நிறைய சடலங்கள் உள்ளன, அவற்றை அடையாளம் காண்பது மிகவும் கடினம். என் மாமியார், அவரது மகளைச் சந்திக்க இங்கிலாந்துக்குச் சென்று கொண்டிருந்தார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
இதேபோல், ராஜஸ்தானின் பிகானேரைச் சேர்ந்த மற்றொரு உறவினர் கூறுகையில், ” விபத்துக்குள்ளான விமானத்தில் என் சகோதரனும் இருந்தார், அவர் பெயர் அபினவ் பதியார். அவர் என் மாமாவின் மகன். அவரது தாய்வழி மாமா இறந்துவிட்டதால் அவர் லண்டனில் இருந்து இங்கு வந்திருந்தார். அவர் இங்கு ஒரு மாதமாக இருந்தார். மீண்டும் லண்டன் திரும்பினார். ஆனால், விமானம் புறப்பட்ட 10 நிமிடத்திற்குள் இந்த துயர செய்தியை நாங்கள் அறிந்தோம் என உறவினர் தெரிவித்தார்.