ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்த நிலநடுக்கம் ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானையும் சுனாமி தாக்கியது.. இதனால் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி கணிப்பு உண்மையாகிவிட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஜூலை 2025 இல் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி எற்படும் என்று அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்தார். அவரின் இந்த கணிப்பு கடந்த மாதத்தில் இருந்தே வைரலானது..
1999 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட தட்சுகியின் மங்கா வதாஷி கா மிதா மிராய் (நான் பார்த்த எதிர்காலம்) மீண்டும் கவனம் பெற்றுள்ளது.. தட்சுகியின் பல பேரழிவுகளை துல்லியமாக கணித்துள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். இளவரசி டயானா மற்றும் ஃப்ரெடி மெர்குரியின் இறப்புகள், கோவிட்-19 பரவல் மற்றும் மிகவும் பிரபலமாக, மார்ச் 2011 நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற நிகழ்வுகளை அவர் துல்லியமாக கணித்திருந்தார்..
இந்த ஆண்டு, தட்சுகியின் மங்காவின் 2025-ம் ஆண்டுக்கான கணிப்புகள் வெளியானது.. ஜூலை 5 அன்று பெரிய அளவில் சுனாமி ஏற்படக்கூடும் என்று கூறப்பட்டது.. ஆனால் ஜூலை 5-ம் தேதி எந்த இயற்கை பேரிடரும் நடக்கவில்லை. ஆனால் இப்போது, இன்று ஏற்பட்ட வலுவான பூகம்பம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி எச்சரிக்கைகளுக்குப் பிறகு, மங்கா பற்றிய விவாதங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. கணிப்பு சில வாரங்களுக்கு முன்பே இருந்ததா என்று பலர் யோசிக்கிறார்கள்.
ஒரு பயனர், “ரஷ்யாவின் கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஜப்பான் கடற்கரை முழுவதும் 3 அடி சுனாமி எச்சரிக்கை, 2011 நிலநடுக்கத்தை முன்னறிவித்த ஜப்பானிய மங்காவின் கணிப்பு மீண்டும் உண்மையானது.. ஜப்பான் மக்களே, பாதுகாப்பாக இருங்கள்.”
மற்றொரு பயனர் “சரியான தேதி இல்லை, ஆனால் நீங்கள் ரியோ தட்சுகியை மதிக்க வேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்..
“ஜூலை 2025 இல் ஒரு மெகா சுனாமியை நியூ பாபா வாங்கா, ரியோ டாட்சுகி எவ்வாறு கணித்தார்? நீங்கள் மேற்கு கடற்கரையில் இருந்தால், விலகிச் செல்லுங்கள்” என்று மற்றொரு பயனர் ஒருவர் எச்சரித்தார்.
ரஷ்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்
ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கம் என்று இது கூறப்படுகிறது.. இந்த நிலநடுக்கம், ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கடலோர நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியின் தென்கிழக்கே சுமார் 125 கி.மீ தொலைவில் ஏற்பட்டது.
சிறிது நேரத்திலேயே, ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரையின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் (10–13 அடி) வரை சுனாமி அலைகள் பதிவாகின. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பசிபிக் கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கடலோரப் பகுதிகளைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதுவரை, 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயர அலைகள் ஹொக்கைடோவின் முக்கிய வடக்கு தீவைத் தாக்கியது..
ஜப்பான் சிறிய சுனாமி அலைகளை மட்டுமே பதிவு செய்திருந்தாலும், எந்த சேதமும் காணப்படவில்லை என்றாலும், தகவல் சேகரிப்பு மற்றும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் பதிலளிப்பதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.