தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உதயநிதி சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகியும் பரம்பரை பரம்பரையாக கலைஞர், முக. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பழக்கமான குடும்பத்தினராக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும் அனைத்து அமைச்சர்களும் தலைவரைப் போலவே வணங்கிச் செல்லும் அளவிலேயே உதயநிதி கருதப்படுகிறார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சமீப நாட்களாகவே பேச்சு அடிபடுகிறது. அமைச்சர்கள் பலரின் செயல்பாடுகள் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு திருப்தி அளிக்காததால், இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக அமைச்சர்களின் பேச்சுக்களும் அதனை உறுதி செய்வதாக இருக்கின்றன. தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.