தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ் ஒரு பக்கம் தன்னுடைய மனைவியுடன் விவாகரத்து குறித்த பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்தாலும், இதுவரை அதை பெரிதாக வெளியில் காட்டிக் கொண்டது இல்லை. இதைத்தொடர்ந்து தனுஷ் தன்னுடைய மகன்தான் என கடந்த சில வருடங்களாகவே கூறிவரும் மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியின் சார்பில், புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, மீண்டும் தனுஷுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த தம்பதியினர், சிறுவயதில் தொலைந்து போன தங்களுடைய மகன்தான் தனுஷ் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் நேரிலும் ஆஜராகி உள்ளார். இவரின் அங்க அடையாளங்கள் குறித்த சோதனையின் போது லேசர் மூலம், சில அடையாளங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் தனுஷ் தரப்பில் இருந்து இது முற்றிலும் வதந்தி என கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தனுஷுக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் விதமாக, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷை தன்னுடைய மகன் எனக்கூறி வரும், கதிரேசனுக்கு 70 வயதாகும் நிலையில், திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், தனுஷின் வழக்கு தொடர்பாக கதிரேசனின் டிஎன்ஏவை பாதுகாக்க வேண்டும் என மதுரை தம்பதியினர் சார்பில் வழக்கறிஞர் டைட்டஸ் என்பவர் மருத்துவமனை டீனுக்கு மனு அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.