உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்வலி என அரசு மருத்துவமனைக்கு சென்ற கால்பந்தாட்ட வீராங்கனை உயிர்பறிபோன சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரியாவின் சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரியாவுக்கு மூன்று சகோதரர்கள் என்பதால் யாருக்கு அரசு வேலை வேண்டும் என்பதை குடும்பத்தினர் முடிவு செய்து தெரிவித்தால் அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்தார். இன்று பிரியாவின் பெற்றோர் முடிவு செய்து அரசுக்கு தெரிவிப்பார்கள் என கூறப்படுகின்றது.
உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினருக்கு சொந்த வீடு வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் தாய் அமைச்சர் சேகர் பாபுவிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவி பிரியாவின குடும்பத்தினருக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.