டாஸ்மாக் கடையில் சுவற்றை துளையிட்டு கடையிலேயே சாவகாசமாக மது அருந்திய போது சிக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாஸ்மாக் கடையின் சுவறு துளையிடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அந்த துளையின் வழியாக போலீசார் டார்ச் லைட் அடித்து பார்த்த போது அங்கு 2 பேர் மது அருந்தி கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. பின்னர், அவர்கள் இருவரையும் துளையின் வழியாக போலீசார் வெளியேற்றினர்.
![’Hello பிரபா ஒயின்ஷாப் ஓனருங்களா’..! வடிவேலு பாணியில் டாஸ்மாக்கில் நடந்த சுவாரஸ்யம்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/1662269584509.jpeg)
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியதும் தெரியவந்தது. மேலும், மது பாட்டில்களையும் திருடி செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.