திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக பெண்ணின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாத் (32). இவருக்கும் அனிஷா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர், மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, வேலைக்காக குவைத்துக்கு சென்றுள்ளார் பிரசாத். திருமணத்தின் போது 70 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக அனிஷாவின் தந்தை கொடுத்துள்ளார். மீதி 30 சவரன் நகையை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால், சில மாதங்கள் ஆகியும் அந்த 30 சவரன் நகைகளை அனிஷாவின் தந்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, அனிஷாவின் பெற்றோர் தங்களது மகளை வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பிரசாத்தின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து பிரசாத் சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று, அனிஷா குடும்பத்தாருக்கு வந்த போனில், உங்களது மகள் தூக்குப்போட்டு கொண்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூறியுள்ளனர். இதனால் பதறியடித்து அனிஷா குடும்பத்தார் மருத்துவமனை சென்ற நிலையில், உங்கள் மகள் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதையடுத்து குடும்பத்தாரும், உறவினர்களும் அனிஷாவை பிரசாத் குடும்பத்தினர் கொலை செய்துவிட்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அனைவரும் கலைந்துச் சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.