தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் மகன் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன், சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க அவனது பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இதை தெரிந்து கொண்ட அந்த மாணவன், தான் விடுதிக்கு செல்ல விருப்பமில்லை என்று தாய் யுவராணியிடம் கூறியிருக்கிறான். ஆனால், தாய் யுவராணியோ நீ விடுதியில் தங்கியிருந்தால்தான் சரியாக படிப்பாய். வீட்டில் இருந்தால் படிப்பில் உனக்கு கவனம் போகவில்லை என்று சொல்லி இருக்கிறார். இதில், தாய் யுவராணிக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

விடுதிக்குப் போக மாட்டேன் என்று சிறுவன் எவ்வளவோ சொல்லியும் தாய் யுவராணி பிடிவாதமாக விடுதியில் தங்கியிருந்துதான் இனிமேல் படிக்க வேண்டும். அப்போதுதான் ஒழுங்காக படிப்பாய் என்று சொல்லிவிட்டு இரவு தூங்கச் சென்றிருக்கிறார். ஆனால், ஆத்திரம் தீராத அந்த சிறுவன், தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் ஹலோ பிளாக் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளான். இதில், துடி துடித்து சம்பவ இடத்திலேயே அவனது தாய் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், யுவராணியின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.