நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகளும், வேலைக்கு சென்று வந்தவர்களும் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்கு ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அங்கு வந்தனர். திடீரென அந்த வாலிபர், தன்னுடன் வந்த இளம்பெண்ணை தூக்கியபடி நடந்து சென்றார். சிரித்தபடியும், அந்த இளம்பெண்ணை கொஞ்சியபடியும் தூக்கிச் சென்றார். அதை ஒருவர் வீடியோ பதிவு செய்தார்.
முதலில் அந்த இளம் ஜோடியின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்த பொதுமக்கள், சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என கருதினர். ஆனால், அவர்கள் சினிமா படப்பிடிப்பு நடத்தவில்லை. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவிடுவதற்காக வீடியோ எடுக்கிறார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. இதை தெரிந்து கொண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக விசாரித்தத்தில் இளம்பெண்ணும், வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும், சமூக வலைதளங்களில் வெறும் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற செயல்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.