திருச்சி அருகே மணப்பாறையில் சிறார் ஆபாச வீடியோக்கள், வெளிநாடு பண பரிவர்த்தனை தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியில் வசித்து வருபவர்
சுப்பிரமணியன். இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர். இவரது மகன் ராஜா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது திருப்பூரில் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது வீட்டிற்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதியுடன் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறார் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்வது, வெளிநாட்டிற்கு பதிவேற்றம் செய்தது என இணையத்திலிருந்து பணம் பெற்றதாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
![சிறார்களின் ஆபாச வீடியோக்களை விற்று சொகுசு வாழ்க்கை..!! சிபிஐ அதிரடி ரெய்டு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/12/Copy-of-1-Frame-4-16698881533x2-1-1024x683.jpg)
மேலும் இதுபோன்ற வழக்கில், சில மாநிலங்களில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களிடையே பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் எந்தவித தகவலும் அளிக்கவில்லை. இந்நிலையில், 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை முடிவில் ராஜாவிடமிருந்து அவரது லேப்டாப், செல்போன் உள்ளிட்ட சில மென்பொருள் சேமிப்பு கலன்களை கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர். திருச்சியில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.