தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் 49 வயதான பழனிவேல். தச்சராக உள்ள இவருக்கு 44 வயதான அமிர்தவள்ளி என்ற மனைவியும், பார்கவி, ஸ்ரீமதி என இரண்டு மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் பார்கவி தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் ஸ்ரீமதி பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது மகன் வெற்றிவேல் ஐந்தாம் வகுப்பும் படித்து வருகிறார். பழனிவேல், சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால், அடிக்கடி பழனிவேலுக்கும், அமிர்தவள்ளிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வந்துள்ளது.
கணவன் சரியாக வேலைக்கு செல்லாததால், அமிர்தவள்ளி ஆடு வளர்த்தும், விவசாய பணி மற்றும் நூறு நாள் வேலைக்கு சென்றும் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், பழனிவேல் தனது மூத்த மகளான பார்கவியை தனது தங்கை மகனுக்கு திருமணம் செய்து தர வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அமிர்தவள்ளி சம்மதிக்கவில்லை. இந்நிலையில், வழக்கம் போல் நேற்று குடிபோதையில் வீட்டிற்க்கு வந்த பழனிவேல், அமிர்தவள்ளியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பழனிவேல், மண் வெட்டியை எடுத்து அமிர்தவள்ளியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அமிர்தவள்ளி வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர், பழனிவேல் வீட்டை சாத்திவிட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில், பள்ளி முடிந்து குழந்தைகள் வந்து வீட்டை திறந்து பார்த்தபோது, தாய் அமிர்தவள்ளி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த பிள்ளைகள் கதறி அழுதுள்ளனர். இதையடுத்து, பழனிவேல் ஒரத்தநாடு ஸ்டேஷனுக்கு சென்று, தனது மனைவியை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். பின்னர் ஒரத்தநாடு போலீசார், அமிர்தவள்ளியின் உடலை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.