தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி, 5-க்கும் மேற்பட்ட ஆண்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண், கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தீபன் (32). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். நீண்டகாலமாக பெண் கிடைக்காததால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தீபன் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தன்னை விட வயதில் மூத்தவரான அருள்ஜோதி (36) என்பவரை ஒரு மாதத்துக்கு முன்பு தீபன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது அருள்ஜோதிக்கு 15 பவுன் நகை போட்டுள்ளார் தீபன். ஆனால், திருமணமான ஒரு மாதத்தில் அருள்ஜோதி மாயமாகினார். அவர் எங்கே என்பது குறித்து பல இடங்களில் விசாரித்த போது அருள்ஜோதி, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறியும் 5-க்கும் மேற்பட்டோரை ஏற்கனவே திருமணம் செய்தது தெரியவந்தது.
பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த தீபன் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த அருள்ஜோதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அருள்ஜோதி என்ற தனது பெயரை கவுசல்யா, சரண்யா என மாற்றிக்கொண்டு 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் தான் அழகாக இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, திருமணத்துக்காக ஏங்கும் ஆண்களை மோசடி வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார் அருள்ஜோதி.
திருமணம் செய்வதற்கு தன்னிடம் நகைகள் இல்லை என்று கூறி, மணமகனிடம் நகையை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே அவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அருள்ஜோதிக்கு உடந்தையாக இருந்த அவரது காதலன் ரகுவரன் (32) என்பவரும் கைதாகியுள்ளார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.