அதிமுகவின் உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு அமையும் என்று ரவீந்திரநாத் எம்பி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை எளிய தொண்டன்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தலைமை கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக்கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. இதுகுறித்து மேல்முறையீடு செய்தபோது 2 வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
![ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் சந்திப்பு நடக்குமா? - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி பரபரப்பு பேட்டி..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/01/collage-1-1024x576.jpg)
அதிமுகவின் உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு அமையும். தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. என்னுடைய பங்களிப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு எடுப்பார். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெறுமா? என்பது தொண்டர்களின் மனதை பொறுத்து அமையும். கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அதிமுக எம்பியாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன். அதிமுக பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை”. இவ்வாறு அவர் கூறினார்.