சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு தனது நண்பர் வீட்டில் உறங்கிய நிலையில், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிசிஏ பட்டதாரி மகாவிஷ்ணு (21). நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர் ராம்குமார் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஹோட்டல் ஒன்றில் நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு போதையில் தூங்கியுள்ளார். இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த மகாவிஷ்ணு நீண்ட நேரமாகியும் எழாமல் இருந்ததால், அவரது நண்பர்கள் அவரை எழுப்பிய போது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மகாவிஷ்ணுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த போலீசார், மகாவிஷ்ணு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.