ராசிபுரத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் ரூ.10-க்கு டீ சர்ட் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், அதிகாலை முதலே கடை வாசலில் கூட்டம் கூடியது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதி கன்னையா தெருவில் புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு கடை திறப்பு நாளில் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரப்படுத்தி இருந்தனர். இந்நிலையில், 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் வாங்குவதற்காக கடையின் முன்பு அதிகாலை முதலே பலரும் கூடினர். கடை 8 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், கடை திறப்பதற்கு முன்பே வாசலில் கூடிய இளைஞர்கள் போட்டிப் போட்டு கொண்டு டி சர்ட்டை வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கவே அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றுள்ளனர். மேலும், நூற்றுக்கு அதிகமானோர் கடை வாசலில் கூடியதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனை அறிந்த ராசிபுரம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.