வீட்டின் முன்பு சத்தமாக பேசிய வாலிபர்கள் கண்டித்த மரக்கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (61). இவர் மரக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தபோது, சுகுமார் (19), கபில் (21), சேவாக் (19), அஜித் (20) ஆகியோர் சத்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். அந்த வாலிபர்கள் ஆபாச வார்த்தைகளுடன் சத்தமாக பேசியதால், பாண்டியன் அவர்களை கண்டித்தார். இதனால், அவருடன் அந்த வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த 4 பேரும் சேர்ந்து பாண்டியனை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அப்போது அங்கு வந்த சேவாக்கின் தந்தை சந்திரகுமாரும் பாண்டியனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழனிசெட்டிபட்டி போலீசார், பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அவருடைய மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுகுமார், கபில், சேவாக், அஜித் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.