பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘அதற்கு வாய்ப்பே இல்லை, வாய்ப்பில்லை ராஜா… வாய்ப்பில்ல’ என்றார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால், இவர்களை எங்கள் கட்சியில் சேர்ப்பது, நடக்கவே நடக்காது என்றார். உலகிலேயே துக்ளக் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு திராவிடத்தையே இழிவுபடுத்தும் வகையில்தான் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. பொதுவாக பிற மாநிலங்களில் மகளிருக்காக புதிய பேருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கே பழைய பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து வைத்திருக்கின்றனர். அதிலும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியுமா? என்றால் இல்லை.

மொத்த பேருந்துகளில் 10 சதவீதம் கூட பிங்க் பேருந்துகள் இல்லை. இந்த இலவச பேருந்து பயண திட்டம் பெண்களை ஏமாற்றும் திட்டம்தான். தமிழ்நாட்டின் மானம் கப்பலேறும் அளவுக்கு செய்கிறார்கள். பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு பிங்க் நிற பேருந்துகளுக்குப் பதிலாக எந்த பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யும் வகையில் பாஸ் கொடுக்கலாம். அதை செய்யுங்கள். ஆனால், மக்களை மோசடி செய்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மோசடியான திட்டத்தை, ஏமாற்று திட்டங்களை விளம்பரத்தின் மூலம் முன்னிலைப்படுத்தி ஆதாயம் தேடலாம் என்று நினைக்கிறது. அது நடக்காது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.