இன்று முதல் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு ரயில்வே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக https:annamalaiyar.hrce.tn.gov.in என்ற ஆன்-லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.