சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் துண்டானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சேரன் விரைவுரயில் திருவள்ளுர் அருகே சென்று கொண்டிருந்த போது இரவு 11 மணி அளவில் எஸ்7 எஸ் 8 என்ற 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் கேட்டது. பயத்தில் பயணிகள் அலறிய நிலையில் ரயில் நிலையத்தின் 4-வது மேடையில் ரயில் சென்றபோது இரண்டு பெட்டிகளை இணைக்கும் பெரிய கொக்கி துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது.
ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு அவை விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் வழியாக கோவைக்கு புறப்பட்டு சென்றது.
ரயிலின் வேகத்தை அதிகரித்து பயணிகளின் பயண நேரத்தை குறைக்க பல்வேறு திட்டங்களை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகின்றது. எனினும் தொடர்ந்து செய்யப்படும் பராமரிப்பு பணிகளை சரிவர கவனிக்காததால் இது போன்ற விபத்துக்கள் நேரிடுகின்றது. விபத்துக்களை தவிர்க்க பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.