கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பாலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுபதி. இந்த இளைஞர் சத்யப்பிரியா என்ற இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சேதுபதியின் ஒருதலைக்காதல் தொல்லை குறித்து சத்தியப்பிரியா யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் சேதுபதியின் தொல்லை அதிகரிக்கவே வேறு வழியின்றி யாரிடமாவது சொல்லலாம் என்று முடிவு செய்துள்ளார். அதற்குள் சத்யப்பிரியாவை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் சேதுபதி. சேதுபதியின் இந்த செயலுக்கு அவர்களின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சத்தியப்பிரியா தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். தன்னை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சேதுபதி, அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.