பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம், புதுநகரை சேர்ந்தவர் 40 வயதான ஜெயமாலா. செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வரும் இவரது கணவர் சக்திவேல், கடந்த 5ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இவருக்கு ஜெகன் பிரியா, சத்யபிரியா ஆகிய 2 மகள்களும், கிரி என்ற மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜெகன் பிரியாவிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில், மூத்த மருமகனின் தம்பி ரூபன், ஜெயமாலா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். உளுந்தூர்பேட்டையில் போலீசாக உள்ள ரூபன், வழக்கம் போல் கடந்த 3-ந் தேதி இரவு ஜெயமாலா வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு அவர்களிடம் தகராறில் ஈடுபட்ட ரூபன், இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் ரூபன் வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், துப்பட்டா துணியால் சத்திய பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சத்யபிரியாவின் தம்பி கிரி, புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சத்திய பிரியாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தாயாரும் தாயாரின் கள்ளக்காதலன் ரூபனும் சத்திய பிரியாவை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.