திடீரென அமர்ந்த நிலையில் இருந்தோ அல்லது படுத்திருந்தோ எழுந்திருக்கும்போது ஏற்படும் தலைச்சுற்றல், பார்வை மங்கல் மற்றும் உடல் தள்ளாட்டம் போன்ற அறிகுறிகளைப் பலரும் தற்காலிக அசௌகரியமாகவே கருதி கடந்து செல்கின்றனர். ஆனால், மருத்துவ ரீதியாக ‘ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்’ (Orthostatic Hypotension) என்று அழைக்கப்படும் இந்த நிலை, உடலின் ரத்த அழுத்தச் சமநிலையில் ஏற்படும் முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது.
நாம் நிலையை மாற்றும்போது, புவிஈர்ப்பு விசையினால் ரத்தம் இயல்பாகவே கால்களை நோக்கிப் பாயும். அத்தகைய தருணங்களில், இதயத்துடிப்பை அதிகரித்து ரத்த நாளங்களைச் சுருக்குவதன் மூலம் மூளைக்குச் செல்லும் ரத்த விநியோகத்தை உடல் சீராக வைத்திருக்கும். ஆனால், சில நேரங்களில் இந்தத் தற்காலிக மாற்றத்தை உடல் விரைவாகச் செய்யத் தவறும்போது, ரத்த அழுத்தம் சட்டென குறைந்து தலைச்சுற்றல் அல்லது மயக்கம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
இதற்குப் பின்னால் சாதாரண நீரிழப்பு, ரத்த சோகை முதல் நரம்பு மண்டலக் குறைபாடுகள் வரை பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, முதியவர்களுக்கு இந்த அனிச்சைச் செயல்கள் குறைவதால் இப்பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள், சட்டென ரத்த அழுத்தம் குறைவது எதிர்காலத்தில் ‘டிமென்ஷியா’ (Dementia) எனப்படும் ஞாபக மறதி நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம் என எச்சரிக்கின்றன.
இந்த தொந்தரவை தவிர்க்க, வேகமான அசைவுகளைத் தவிர்த்து நிதானமாக எழுந்திருப்பது, போதிய அளவு நீர் அருந்துவது மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிப்பது அவசியம். அடிக்கடி இத்தகைய கிறுகிறுப்பு ஏற்படுமானால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இது தற்காலிக தலைச்சுற்றலை தடுப்பதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவு போன்ற விபத்துகளையும், தீவிர நரம்பியல் பாதிப்புகளையும் தவிர்க்க உதவும்.
Read More : பணம் சம்பாதிப்பது எப்படி..? 115 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ரகசிய புத்தகம்..!!



