இந்தியாவை பொறுத்தவரை விவசாய தொழிலில் லாபம் இல்லாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. எனவே, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சூரியசக்தி மின் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்தில் டீசலை நீக்குவதற்கான ஆதாரங்களை வழங்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் மழை இல்லாமல் சாகுபடி பாதிக்கப்பட்டாலும், சூரியசக்தி மின்சாரம் மூலம் விவசாயிகள் வருவாயை ஈட்டலாம். எனவேதான், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் சோலார் நீர் பம்பு செட்களை அமைப்பதன் மூலம் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. விவசாயிகளிடம் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்குவதற்கு இழப்பீடாக, மத்திய அரசு ஊக்கத்தொகை என்ற பெயரில் யூனிட்டுக்கு 40 காசு அல்லது 1 மெகாவாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.6.60 லட்சம் வழங்கும் அல்லது இரண்டில் எது குறைவோ அதை மின் வாரியத்திற்கு 5 ஆண்டுகளுக்கு வழங்கும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மத்திய அரசின் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மின் வாரியம் முடிவு செய்திருக்கிறது. பிரதான் மந்திரி குசும் திட்டத்தின் A, C பிரிவின்கீழ், 11 கிலோ வோல்ட், 22 கிலோ வோல்ட் மின் வழித்தடங்களை உடைய துணை மின் நிலையங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தரிசு மற்றும் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிலத்தை குத்தகைக்கு வழங்க விருப்பும் விவசாயிகளுக்கு மின்சார வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. மின் நிலையம் அமைக்க தரிசு நிலம், சாகுபடி செய்ய முடியாத நிலங்களை குத்தகைக்கு வழங்கினால், அதற்கு குத்தகை தொகை வழங்கப்படும். ஒருவேளை நிலத்தின் உரிமையாளரே மின் நிலையம் அமைக்க விரும்பினால், அதற்கும் அனுமதி வழங்கப்படும். இந்த மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒரு யூனிட் ரூ.3.28-க்கு வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! மாதம் ரூ.34,000 வரை சம்பளம்..!!