இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கும் ரூ.1 ரூபாய் நாணயம், இந்திய நாணய அமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். எனினும், இதை உற்பத்தி செய்வதற்கான செலவு அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக உள்ளது என்ற தகவல் நிதி சார்ந்த சுவாரஸ்யமான சவாலை வெளிப்படுத்துகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவலின்படி, ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க இந்திய அரசுக்கு ரூ.1.11 செலவானது தெரியவந்துள்ளது. இதன் மூலம், அரசு நாணயத்தின் மதிப்பை விட அதிகமாக செலவழிக்கிறது. பணவீக்கத்தின் காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்குள் இதன் உற்பத்திச் செலவு இன்னும் கணிசமாக அதிகரித்திருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஒரு ரூபாய் நாணயம் துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) மூலம் உருவாக்கப்படுகிறது. இதன் விட்டம் 21.93 மி.மீ, தடிமன் 1.45 மி.மீ, மற்றும் எடை 3.76 கிராம் ஆகும். இதன் வடிவமைப்புக்குச் சிறப்பு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. மற்ற நாணயங்களை ஒப்பிடும்போது, ஒரு ரூபாய் நாணயத்தின் இந்த கூடுதல் செலவு விசித்திரமாக உள்ளது.
உதாரணமாக, ரூ.2 நாணயத்தின் உற்பத்திச் செலவு ரூ.1.28, ரூ.5 நாணயத்தின் செலவு ரூ.3.69, மற்றும் ரூ.10 நாணயத்தின் செலவு ரூ.5.54 ஆகும். அதாவது, ஒரு ரூபாய் நாணயத்தைத் தவிர மற்ற நாணயங்கள் அனைத்தும் அவற்றின் உண்மையான மதிப்பை விட குறைந்த செலவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தி மற்றும் விநியோகம் :
இந்தியாவில் நாணயங்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அதிநவீன இயந்திரங்களில் அச்சிடப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பின், அவை இந்திய ரிசர்வ் வங்கியால் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பொறுப்பு RBI-யிடம் உள்ளது. ரூ.1000 மதிப்புள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு அவற்றின் மதிப்பை பொறுத்து மாறுபடும். உதாரணமாக, 1,000 பத்து ரூபாய் நோட்டுகளை அச்சிட சுமார் ரூ.960-ம், 1,000 இருபது ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ.1,770-ம், 1,000 ஐநூறு ரூபாய் நோட்டுகளை அச்சிட சுமார் ரூ.2,290-ம் செலவாகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் தாக்கம் :
அதிகரித்து வரும் இந்த உற்பத்தி செலவுக்கு மத்தியில், நாணயங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியும் குறைந்து வருகிறது. RTI தரவுகளின்படி, நாணய உற்பத்தி ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், UPI, PhonePe, Google Pay போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளின் அபரிமிதமான வளர்ச்சிதான். QR குறியீடு மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளதால், சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை நாணயங்களின் பயன்பாட்டை பெருமளவு தவிர்த்துவிட்டனர். இது ஒரு ரூபாய் நாணயத்தின் தேவையை மேலும் குறைத்து, அதன் இருப்பை எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கலாம்.
Read More : உங்களுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வராது..!! உடனே செக் பண்ணுங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!