மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ’தக் லைஃப்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசுகையில், ” ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் இங்கு வந்திருக்கிறார். எனது பேச்சை தொடங்கும் போது ”உயிரே உறவே தமிழே” என தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள்” என பேசியிருந்தார்.
இதற்கு சிவராஜ்குமாரும் தலையசைத்த நிலையில், இந்த கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான், கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, கமல்ஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் இதுபோன்ற கருத்துக்களை பேசக்கூடாது. கன்னட மொழிக்கு பெரிய வரலாறே உண்டு. வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பெங்களூருவில் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர். 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை கமல் அவமதித்து விட்டதாகவும், கமலின் பேச்சு அநாகரிகமாக இருப்பதாகவும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார். நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டிய கமல், மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். கன்னட மக்களிடம் கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாஜக தலைவர் ஆர்.அசோகா, கமல்ஹாசன் ஒரு “மனநோயாளி” என்றும், மற்றவர்கள் அவர் உண்மைக்கு புறம்பானவர் என்றும், கன்னட மொழியின் கலாச்சார அடையாளத்தை அவமதிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், கமல்ஹாசன் கன்னடத்தையும், கர்நாடகாவையும் மீண்டும் மீண்டும் அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். “கர்நாடகாவில் கமல்ஹாசனின் அனைத்து படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்தை வலியுறுத்துவேன், இல்லையெனில் அவர் ஒரு மனநோயாளியைப் போல நடந்து கொள்வார்” என்று அசோகா கூறினார்.