சுத்தம் என்றவுடன் பளிச்சென்ற தரை மற்றும் பளபளக்கும் கழிவறை மட்டுமே பலரது நினைவுக்கு வரும். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வீட்டுப் பொருட்கள், கழிவறை இருக்கையை விடவும் பல மடங்கு அதிக கிருமிகளின் கூடாரமாக இருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமையலறை :
நம் ஆரோக்கியம் தொடங்கும் இடமான சமையலறையிலேயே ஆபத்து ஒளிந்திருக்கிறது. பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்ச், கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற ஈரப்பதம் மற்றும் உணவுத் துகள்களை கொண்டிருப்பதால், இது லட்சக்கணக்கான பாக்டீரியாக்களை சுமக்கிறது. இது வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
இதேபோல, காய்கறி மற்றும் இறைச்சி நறுக்கும் பலகையில் உள்ள கீறல்களுக்குள் கோடிக்கணக்கான கிருமிகள் மறைந்திருக்கும். குறிப்பாக, இறைச்சி வெட்டிய பின் முறையாக சுத்தம் செய்யாவிட்டால், கிருமிகள் மற்ற உணவுப் பொருட்களையும் எளிதில் மாசுபடுத்திவிடும்.
அதேபோல், நாம் தினமும் பயன்படுத்தும் சில தனிப்பட்ட பொருட்களும் கிருமிகளின் கூடாரமாக உள்ளன. நாம் 8 மணி நேரம் உறங்கும் தலையணை உறை, வியர்வை, உமிழ்நீர் மற்றும் இறந்த சரும செல்கள் போன்றவற்றால் கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கிறது. இது முகப்பரு மற்றும் தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது.
இந்த ஆபத்து பட்டியலில், நமது கைப்பேசியும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. எல்லா இடங்களுக்கும் நம்மோடு பயணிக்கும் இது, கழிவறையை விட பத்து மடங்கு அசுத்தமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கைகளைச் சுத்தப்படுத்தாமல் மொபைலைத் தொடுவதால், இது எளிதில் நோய்களைப் பரப்பும் ஊடகமாகிறது.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பயன்படுத்தும் தொலைக்காட்சி ரிமோட், கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதற்கான எளிதான சாதனமாகும். கை அழுக்குகள் மற்றும் உணவுப் பிசுக்குகள் அதன் பொத்தான்களுக்கு இடையில் எளிதில் படிந்துவிடுகின்றன.
இவ்வாறு, நாம் ‘சுத்தமாக இருப்பதாக’ நினைக்கும் இடங்களில்தான் அதிகபட்ச அசுத்தம் மறைந்திருக்கிறது. எனவே, உண்மையான சுத்தம் என்பது கண்ணுக்குத் தெரிவதை மட்டுமல்லாமல், கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிப்பதிலும் தான் அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.