வடகொரியாவில் பொதுவாகவே உடுத்தும் உடை முதல் இசை கேட்பது வரை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் உடைய நாடாக உள்ளது. இதனால், அந்த நாடு எப்போதும் தனித்தே இருக்கிறது. இந்நிலையில், அங்கிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போன் குறித்த ஆய்வு தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட செல்போன் ஒன்று பிபிசி செய்தி நிறுவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்தபோது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. பெரும்பாலான செல்போன்களில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் தான் இருக்கும். ஆனால், வடகொரியா செல்போனில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் போல இருந்தாலும் கூட, அது முழுக்க முழுக்க மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அது முழுக்க முழுக்க வடகொரியாவின் கொள்கைகளைப் பரப்புவது போல தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் கொரியாவுக்கு எதிரான வெறுப்பு கருத்துகளும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆன்லைனில், குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் சாப்ட்வேர்கள் உள்ளது. வடகொரியாவில் பொதுமக்களுக்கு இணைய சேவைகள் என எதுவும் கிடையாது. அங்கிருக்கும் உயரதிகாரிகளுக்குத்தான் இணைய சேவை உண்டு.
பொதுமக்களுக்கு இணைய சேவைக்கு பதிலாக குவாங்மியோங் என்று அழைக்கப்படும் க்ளோஸ்ட் இன்ட்ராநெட் அமைப்பை மட்டுமே அந்நாட்டு மக்கள் பயன்படுத்த முடியும். இது வெளியே பார்க்க இணையம் போல தெரிந்தாலும், வடகொரிய அரசு அளிக்கும் கண்டெண்டுகள் மட்டுமே அதில் இடம்பெறும். வெளியுலக செய்திகளை இது வழங்காது.
மேலும், அந்த செல்போனில் உதாரணத்திற்கு தென்கொரியாவில் காதலைக் குறிக்க ‘oppa’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அந்த வார்த்தையை வடகொரிய செல்போனில் ‘oppa’ என டைப் செய்தால், அது தானாகவே ‘தோழர்’ என்று மாறிவிடுமாம். மேலும், இதனுடன் போலீசார் எச்சரிக்கும் ஒரு மெசேஜும் வரும். அதில், “இந்த வார்த்தையை உங்கள் உடன்பிறப்புகளை விவரிக்க மட்டுமே பயன்படுத்த முடியும்” என இருக்குமாம்.
அதேபோல், இந்த செல்போன் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பயனர்களின் அனுமதியின்றி, ஸ்கிரீன் ஷாட் எடுப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த ஸ்கிரீன் ஷாட்களை வடகொரிய மக்களால் பார்க்கவோ, டெலிட் செய்யவோ முடியாது. அரசு அதிகாரிகள் செல்போனை சோதனை செய்யும்போது மட்டுமே, அந்த ஸ்கிரீன் ஷாட்களை பார்க்க முடியும். மேலும், அந்த செல்போன் எப்படி இருக்கிறதோ அப்படியே பராமரிக்க வேண்டுமாம். எதாவது கூடுதலாக மாற்றினால் கடுமையான குற்றமாகக் கருதப்படுமாம். மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரங்களை வட கொரிய மக்கள் பின்பற்றமால் இருக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read More : தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!!