சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் , நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இடி இடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்களில் கம்பி அறுந்து கிடந்தால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பெய்து மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். மாவட்டத்தில் இன்று காலையும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தம்மம்பட்டி, மேட்டூர், கடையாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.