ஒருவரின் பிறந்த ராசி, அவர்களுடைய ஆளுமை, உள்ளார்ந்த திறமைகள் மற்றும் எதிர்காலப் பாதை ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கியச் சாவியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்தியாவில் எண்ணற்ற வழிபாட்டுத் தலங்கள் இருந்தாலும், சில புகழ்பெற்ற கோவில்கள் ஒவ்வொரு ராசிக்கும் நேரடியாக தொடர்புள்ள பரிகார தலங்களாக விளங்குகின்றன. இந்த தலங்களுக்கு சென்று வழிபடுவது, ஒருவரின் பாவங்களைப் போக்கி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும் என்று நம்பப்படுகிறது.
மேஷம்: இந்த முதல் ராசிக்கான பரிகாரத் தலமாக திகழ்வது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். தென்னகத்தின் வாரணாசி என்று அழைக்கப்படும் இத்தலத்தின் வழிபாட்டுடன் காசி யாத்திரை நிறைவடைவதாகக் கருதப்படுகிறது.
ரிஷபம்: ஆந்திராவில் உள்ள திருமலை வெங்கடாசலபதி கோவில் ரிஷப ராசியினருக்கான முக்கியமான பரிகாரத் தலமாகும். இங்கு திருமணம் முடிக்கும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மிதுனம்: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிதுன ராசிக்குரிய பரிகார தலமாகும்.
கடகம்: கும்பகோணம் அருகே திருவீசநல்லூரில் உள்ள திருத்தேவன்குடி நண்டான் கோவில் கடக ராசிக்கான பரிகாரத் தலமாக உள்ளது. இந்திரனின் சாபத்தால் நண்டாக பூஜித்த கந்தர்வன் இங்கு சாப விமோசனம் பெற்ற பெருமை உண்டு.
சிம்மம்: திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் சிம்ம ராசியினருக்கான பரிகார ஸ்தலமாகும். இத்தலத்தை திருமால் மற்றும் எமதர்மன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். “காசியைவிட வீசம் அதிகம்” என்று இத்தலத்தின் பெருமை பேசப்படுகிறது.
கன்னி: புராணங்களின்படி தினமும் இரு கழுகுகள் வந்து பூசாரிகளிடம் உணவு பெறும் வழக்கத்தைக் கொண்ட திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கன்னி ராசிக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.
துலாம்: முருகனின் 5-வது படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், துலாம் ராசிக்கான பரிகாரத் தலமாகும். சூரனை வதம் செய்த பின் முருகன் கோபம் தணிந்து அமர்ந்த இத்தலத்தில் வழிபட்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விருச்சிகம்: பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், பார்வதி தேவி மண்ணால் ஆன சிவலிங்கத்தைப் பூஜித்த தலமாகவும் விளங்கும் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் விருச்சிக ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக உள்ளது.
தனுசு: பார்வதி தேவி மயில் வடிவில் சிவனை வழிபட்டதால், சிவபெருமானும் மயில் வடிவில் கௌரி தாண்டவம் ஆடிய புகழ் பெற்ற மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் தனுசு ராசிக்கான பரிகார ஸ்தலமாகும்.
மகரம்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், மகர ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகும். சைவர்கள் உச்சரிக்கும் “திருச்சிற்றம்பலம்” என்ற மந்திரச் சொல் இத்தலத்தையே குறிக்கும்.
கும்பம்: இலங்கைப் போருக்குச் செல்லும் முன் ராமபிரான் வழிபட்டதாகக் கருதப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவிபட்டினம் திலகேஸ்வர் கோவில் கும்ப ராசிக்குரிய பரிகாரத் தலமாக உள்ளது.
மீனம்: நவகிரகங்களில் ஒருவரான செவ்வாயின் நோயைத் தீர்த்து, சீர்காழியில் வைத்தீஸ்வரனாக வீற்றிருக்கும் சிவபெருமானின் ஆலயம் மீன ராசிக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. நாடி ஜோதிடத்திற்குப் பெயர் பெற்ற இத்தலம், மீன ராசியினரின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டது என்று நம்பப்படுகிறது.
Read More : ராதையுடன் காட்சி தரும் கிருஷ்ணர்..!! புதுக்கோட்டையில் இப்படி ஒரு கோயிலா..? துளசி மாலையை மறந்துறாதீங்க..!!



