தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான். ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார். இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாவற்றிக்கும் ஒரு தினம் இருக்கையில், தாய்க்கு அடுத்தபடியாக போற்றப்படும் தந்தைக்கு ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3-வது ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.
இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. ‘தந்தையர் தினம்’ என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை யாரும் மறுக்க முடியாது. குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை. ஆம், ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது.
உலகில் முதல் முறையாக தந்தையர் தினம் 1910 ஆண்டு ஜூன் 18-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் இல்லாமல் தந்தையில் அரவணைப்பில் வளர்ந்த பெண் ஒருவர் தந்தையர் தினத்தை தோற்றுவித்தார். 1882ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற பெண் தனது தந்தையை பெருமை படுத்தும் விதமாக நடத்திய நிகழ்வே தந்தையர் தினமாக கொண்டாடப்படுவதாக வரலாறு சொல்கிறது. இது மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் வெவ்வேறு காரணங்களும் கூட சொல்லப்படுகிறது.
16 வயதிலேயே தந்தையை இழந்த செனோரா ஒரு முறை தேவாலயத்தில் நடந்த அன்னையர் தின நிகழ்வில் பங்கெடுத்திருக்கிறார். அப்போது தான் தாயாகவும், தந்தையாகவும் இருந்து தன்னையும் தன்னுடைய 5 சகோதரர்களையும் வளர்த்த தந்தை வில்லியம் ஸ்மார்ட்டுக்கு ஏன் இப்படியான ஒரு தினம் இல்லை என்ற எண்ணம் அவர் நினைவில் உதித்திருக்கிறது.
அதை அப்படியே அவர் தேவாலயத்தில் பகிர பல்வேறு முயற்சிக்கு பிறகு தனது தந்தையை நினைவு கூறும் நிகழ்வை 1900ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் ஞாயிற்று கிழமை கொண்டாடியிருக்கிறார் செனோரா. பின்னர் வெகு சீக்கிரமாகவே அமெரிக்கா முழுவதும் இந்த தினம் பரவி விட்டது.
எனவே, அதிலிருந்து 6 ஆண்டுகள் கழித்து 1916ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த உட்ரோ வில்சன் இந்த தினத்தை அதிகாரபூர்வ நாளாக அறிவித்தார். இதுவே இன்று 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜூன் 18 சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனாலும், பெரும்பாலான நாடுகள் அவர்களது வட்டார நம்பிக்கையின் அடிப்படையில் வெவ்வேறு நாட்களில் தந்தையர் தினத்தை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தந்தையர் தினம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் தந்தை அந்தஸ்தில் இருப்பவர்களை மதித்து நடப்பது அவசியம். குறிப்பாக இந்த நாளில் தந்தைகளிடமும், தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களை வழிநடத்துபவர்களையும் பெருமை செய்வது மிகவும் அவசியம். அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்று, உங்கள் நன்றியுணர்வை செலுத்தி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இந்தியாவில் ஒரு சடங்கு நிகழ்வு போலவே மிக தீவிரமாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.