தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் அரசியல் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள தகவல்கள் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளன. தவெக-வுடன் கூட்டணி அமைக்கப் பல முக்கியக் கட்சிகள் திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாகவும், இதற்காகப் பலரும் தங்களை நாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காங்கிரஸின் ஒரு பிரிவினர் விஜய்யுடன் கைகோர்க்க துடிப்பதாகவும், ஆனால் மூத்த தலைவர்களின் திமுக விசுவாசத்தால் அங்கு ஒருவிதமான இழுபறி நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மற்றும் அதிமுக உடனான உறவு குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள செங்கோட்டையன், தவெக-வின் கொள்கை நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். “பாஜகவே எங்களின் கொள்கை எதிரி என்பதில் விஜய் மிக உறுதியாக இருக்கிறார்” என்று குறிப்பிட்ட அவர், சில விவகாரங்களில் தவெக கடைப்பிடிக்கும் மௌனம் என்பது பாஜக-வுடனான இணக்கம் அல்ல, அது சரியான நேரத்திற்காக காத்திருக்கும் ஒரு முதிர்ச்சியான அரசியல் ராஜதந்திரம் என்று விளக்கமளித்துள்ளார்.
அதேசமயம், அதிமுக-வை திமுக-வின் பி-டீம் என்று கடுமையாக விமர்சித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி தற்போது அதன் அடையாளத்தை இழந்து வருவதாக சாடினார். 2026 தேர்தல் களம் குறித்துப் பேசிய செங்கோட்டையன், தற்போது எடுக்கப்பட்ட கள ஆய்வுகளின்படி தவெக 34 சதவீத வாக்கு வங்கியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா தன்னை முதல்வர் பதவிக்கு அழைத்ததாகவும், ஆனால் அன்றைய பொருளாதார மற்றும் அரசியல் சூழல் காரணமாக அந்த வாய்ப்பை தான் மறுத்துவிட்டதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Read More : நடுத்தர மக்களுக்கு கனவாகவே போகும் தங்கம்..!! நகை வாங்குவோருக்கு இன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!



