கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் எழும் ஒரு பொதுவான கேள்வி, தினமும் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை கழுவ வேண்டுமா..? அல்லது வாரத்திற்கு ஒருமுறை போதுமா..? என்பதுதான். இதற்கான பதில், உங்கள் தலைமுடி வகை, சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட பழக்கவழக்கங்களைப் பொறுத்தது. இரண்டின் நன்மைகள், தீமைகள் மற்றும் யாருக்கு எது பொருந்தும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தினசரி ஷாம்பு போடுவதால் என்ன ஆகும்..?
தினமும் தலைமுடியைக் கழுவுவது, மாசு நிறைந்த சூழலில் வசிப்பவர்களுக்கும், அதிகமாக வியர்ப்பவர்களுக்கும் நல்லது. இது தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் வியர்வையை நீக்கி, உச்சந்தலையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இதனால் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் குறையும்.
ஆனால், தினமும் ஷாம்பு போடும்போது தலைமுடியின் இயற்கையான எண்ணெய்கள் நீக்கப்படுகின்றன. இது கூந்தலை வறட்சியடையச் செய்து, உடைவதற்கும் சேதமடைவதற்கும் வழிவகுக்கும். மேலும், சில ஷாம்புகளில் உள்ள கடுமையான ரசாயனங்கள் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
வாரத்திற்கு ஒருமுறை ஷாம்பு : வறண்ட அல்லது சுருண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை ஷாம்பு போடுவது சிறந்தது. இது தலையின் இயற்கை ஈரப்பதத்தை தக்கவைத்து, முடியை வலுப்படுத்த உதவும். மேலும், ஷாம்புகளில் உள்ள ரசாயனங்களின் தாக்கம் குறையும். இதனால், முடி உதிர்வது குறையும்.
ஆனால், அதிக எண்ணெய் பசையுள்ள கூந்தல் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஷாம்பு போடுவது நல்லதல்ல. இது தலையில் அழுக்கு மற்றும் வியர்வையை அதிகரித்து, பொடுகு மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும்.
உங்களுக்கு எது சிறந்தது..?
எண்ணெய் பசையுள்ள கூந்தல்: ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது தினமும் ஷாம்பு போடுவது நல்லது.
வறண்ட அல்லது சுருண்ட கூந்தல்: வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை ஷாம்பு போடுவது சிறந்தது.
மெல்லிய முடி: ஒருநாள் விட்டு ஒருநாள் ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
அடர்த்தியான அல்லது கரடுமுரடான முடி: இவை ஈரப்பதத்தை தக்கவைக்கும் என்பதால், வாரத்திற்கு ஒருமுறை ஷாம்பு போடுவது போதுமானது.
Read More : தீபாவளி போனஸ் + பழைய ஓய்வூதியத் திட்டம்..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் அறிவிப்பு..!!