கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலாவதியான பழைய மென்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, ஆண்ட்ராய்டு 13 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் சைபர் குற்றவாளிகளின் நேரடிப் பார்வையில் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்த்போன்கள் போதிய பாதுகாப்பு அப்டேட்கள் இன்றி இயங்கி வருவதாக கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய போன்கள் மால்வேர், ஸ்பைவேர் மற்றும் ரான்சம்வேர் போன்ற தீவிர வைரஸ் தாக்குதல்களுக்கு மிகவும் எளிதாக இலக்காகின்றன.
புள்ளி விவரங்களின்படி, உலகெங்கிலும் உள்ள சுமார் 40 சதவீத ஆண்ட்ராய்டு போன்கள் இன்னும் பழைய மென்பொருட்களிலேயே செயல்படுகின்றன. புதிய பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படாததால், ஹேக்கர்கள் இந்த ஓட்டைகளைப் பயன்படுத்திப் பயனர்களின் வங்கி விவரங்கள், ரகசிய கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களைத் திருட அதிக வாய்ப்புள்ளது. ஒரு மென்பொருள் அப்டேட் என்பது போனின் வேகத்தை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, அது உங்கள் டிஜிட்டல் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாகவும் செயல்படுகிறது.
தற்காத்துக் கொள்வது எப்படி..?
இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க, பயனர்கள் உடனடியாகத் தங்கள் போன்களில் உள்ள ‘Settings’ பகுதிக்குச் சென்று புதிய அப்டேட்கள் ஏதேனும் இருக்கிறதா எனச் சரிபார்த்து, அவற்றை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் புதிய அப்டேட்கள் கிடைக்கவில்லை என்றால், பாதுகாப்புக் கருதி புதிய மாடல் போன்களுக்கு மாறுவதே சிறந்தது எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : அரிசியை ஊறவைக்காமல் சமைப்பதால் இவ்வளவு உடல்நலப் பிரச்சனைகள் வருமா..? வியக்கத்தக்க அறிவியல் உண்மைகள்..!!


