சனிக்கிழமை என்பது சனி பகவான், மகா விஷ்ணு (பெருமாள்) மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய மூவருக்கும் உகந்த ஒரு புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் அவர்களை வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். சனியின் தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் வெற்றி வாய்ப்புகள் கூடவும் நாம் செய்ய வேண்டிய ஆன்மீக சடங்குகள் குறித்து இங்கே பார்ப்போம்.
சனி தோஷம் நீக்கும் எள் உருண்டை பரிகாரம் :
சனி பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கும், சனி தோஷத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் ஒரு எளிய பரிகாரத்தை கடைபிடிக்கலாம். சனிக்கிழமைகளில் சாதம் வடிக்கும்போது, அதில் சிறிதளவு தயிரை கலந்து பிசைந்து, பிறகு அதில் கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டைகளை சாப்பிடுவதற்கு முன்னர் காகத்திற்கு வைத்துவிட்டுச் சாப்பிடுவது சனி தோஷத்தின் பாதிப்புகளை நீக்கி நன்மைகளைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
துரதிர்ஷ்டம் நீக்கும் 21 வாரப் பரிகாரம் :
தொடர்ந்து கஷ்டங்களையும் துரதிர்ஷ்டங்களையும் சந்திப்பவர்கள், 21 சனிக்கிழமைகளுக்கு செய்ய வேண்டிய ஒரு சக்திவாய்ந்த திருஷ்டி கழிக்கும் முறை உள்ளது. ஒரு சதுரமான கருப்புத் துணியை எடுத்து, அதில் ஒரு ரூபாய் நாணயம், சிறிதளவு கல்லுப்பு ஆகியவற்றை வைத்து, கருப்பு நூல் கொண்டு நன்கு இறுக்கமாக முடிந்து கொள்ள வேண்டும். இதனை, கிழக்கு நோக்கி நின்று உங்கள் தலையைச் சுற்றி ஏழு முறை திருஷ்டி கழித்து, பிறகு அருகில் உள்ள அரச மரத்தடியில் போட்டுவிட்டு வர வேண்டும்.
இந்த 21 வார சடங்கு, தரித்திரங்களை நீக்கி, வெற்றி வாய்ப்புகள் மற்றும் அதிர்ஷ்ட யோகங்கள் உங்களைத் தேடி வர வழி வகுக்கும். இந்தப் பரிகாரத்தை சனிக்கிழமை காலை (6 மணி முதல் 7 மணி வரை) அல்லது மாலை (6 மணி முதல் 7 மணி வரை) செய்யலாம். தீட்டுக் காலங்களில் கூட, நீராடிவிட்டு இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம் என்று நம்பப்படுகிறது.
பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு :
பெருமாள்: ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாள் கோவிலுக்கு சென்று மூலவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது விசேஷம். துளசியில் மகாலட்சுமி வாசம் செய்வதால், நாராயணருக்கு லட்சுமியைக் கொடுத்து வணங்குவது, நம் வாழ்வில் வறுமை நீங்கிச் செழிப்புடன் இருக்க உதவும். மேலும், பெருமாள் சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி மூலவருக்கு காண்பித்து ஆலயத்தில் வைத்துவிட்டு வருவதால் நினைத்த காரியங்கள் பலிக்கும்.
ஆஞ்சநேயர்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணெய் சாற்றி வழிபடுவது வெற்றியை உறுதி செய்யும், சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், நெற்றியில் செந்தூரம் இட்டுக்கொண்டு ஹனுமன் சாலிசா படிப்பது சிறந்த பரிகாரமாகும். வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க, வாகனங்களில் அனுமன் சிலை அல்லது கொடியை சொருகுவது கூடுதல் பலன்களை தரும்.
அதேபோல், துர் கனவுகள் அண்டாமல் நிம்மதியான தூக்கம் பெற, சனிக்கிழமை இரவு உறங்க செல்வதற்கு முன் ஒரு இரும்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதனை நீங்கள் தூங்கும் கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டுத் தூங்கலாம்.



