ஓய்வு வாழ்க்கையை பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தை ஆபத்து இல்லாமல் மத்திய அரசின் உத்தரவாதத்துடன் அதிக வருமானம் தரும் ஒரு திட்டம் குறித்து தற்போது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. அது தான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF).
PPF என்பது மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் நீண்டகால சேமிப்புத் திட்டம். முதலீடு செய்யப்படும் தொகைக்கும், அதிலிருந்து கிடைக்கும் வட்டிக்கும் முழுமையான அரசாங்க உத்தரவாதம் வழங்கப்படுகிறது. வட்டி தொகை கூட்டு வட்டியாக கணக்கிடப்படுவதன் மூலம், நீண்ட காலத்தில் பெரிய தொகையாக மாறும்.
இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டு தொகைக்கு வருமான வரி சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கும் கிடைக்கிறது. மேலும், பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விதிக்கப்படாது.
15 + 5 + 5 விதி: முதல் 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், மொத்தமாக ரூ.22.5 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு கூட்டு வட்டி சேர்ந்து, 15 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.40.68 லட்சமாக மாறுகிறது. அதனை தொடர்ந்து, கணக்கை இரண்டு முறை தலா 5 ஆண்டுகளாக நீட்டிக்கலாம். இந்த 10 ஆண்டுகளில் புதிய முதலீடு செய்யாமல் இருந்தாலும், கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து சேரும்.
இதன் முடிவில், 25 ஆண்டுகள் நிறைவடையும்போது கணக்கில் சுமார் ரூ.1.03 கோடி சேரும். 25 ஆண்டுகளுக்குப் பின் கணக்கில் உள்ள ரூ.1.03 கோடியை முழுவதுமாக எடுக்காமல், அசலை வைத்து, வட்டியை மட்டும் பயன்படுத்த முடியும். ஆண்டு கணக்கில் சுமார் ரூ.7.31 லட்சம் வட்டியாகவும், மாதத்திற்கு ஏறத்தாழ ரூ.60,000 வருமானமாகவும் பெற முடியும். இது ஓய்வு காலத்திற்கு ஒரு பாதுகாப்பான ஓய்வூதியமாக அமையும்.
இந்த PPF கணக்கை இந்திய குடிமக்கள் தபால் அலுவலகங்களிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தொடங்கலாம். பெற்றோர்கள் மைனர் குழந்தைகளின் பெயரில் கூட இந்தக் கணக்கைத் திறக்கலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.500; அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது.
Read more: சனியின் பார்வையால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர்.. எதை தொட்டாலும் யோகம் தான்..!!



