கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வழக்கில் பகவால் சிங் மற்றும் அவரது மனைவி லைலா மற்றும் அகமது முகமது ஷபி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகவால் சிங்கின் மனைவி லைலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ’கொலை செய்யப்பட்ட 2 பெண்களின் உடல்களை, பச்சையாக சாப்பிட முகமது ஷபி வலியுறுத்தியதாகவும், அந்த உடலை சமைத்து சாப்பிடலாம் என கூறியதற்கு ஒரு மந்திரப் புத்தகத்தை எடுத்து வைத்து அந்த மந்திர புத்தகத்தில் பச்சையாக சாப்பிட கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, 3 பேரும் உடல்களை பச்சையாக சாப்பிட்டோம்’ என்று லைலா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நரபலி கொடுத்த பின் பத்மா, ரோஸ்லின் ஆகிய 2 பேரின் உடல்களில் இருந்த நகைகளை எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அடகு வைத்து அந்த பணத்தையும் செலவு செய்துள்ளதாக லைலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது இந்த வாக்குமூலம் ஒட்டுமொத்த கேரளாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தற்போது 3 பேர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் 10 நாட்கள் தங்கள் கஸ்டடிக்குள் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.