குழந்தைகள் உறங்கும்போது மூக்கு வழியாக மூச்சுவிடுவதுதான் இயற்கை. ஆனால், சில குழந்தைகள் வாய்வழியாக மூச்சுவிடுவதை பெற்றோர் கவனித்திருப்பார்கள். “ஏதோ குழந்தை வாய் திறந்து தூங்குகிறது” என்று இதனை எளிதாக கடந்துவிடக் கூடாது என எச்சரிக்கிறார் சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சுபாஷ். இது ஒரு பழக்கமல்ல, உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பாதிப்பின் அறிகுறி என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வாய்வழி சுவாசத்தால் ஏற்படும் சிக்கல்கள் :
வாய் வழியாக தொடர்ந்து மூச்சுவிடும்போது, வாயிலுள்ள எச்சில் விரைவாக உலர்ந்து போகிறது. இது பற்களில் சொத்தை ஏற்படுவதற்கும், வாய் சார்ந்த இதர நோய்த்தொற்றுகளுக்கும் அடித்தளமிடுகிறது. இதைவிட முக்கியமாக, வாய்வழி சுவாசம் சீரான உறக்கத்தைக் கெடுக்கிறது. இதனால் குழந்தைகள் காலையில் எழுந்திருக்கும்போது மிகுந்த சோர்வுடனும், காரணமில்லாத எரிச்சலுடனும் காணப்படுவார்கள். உறக்கமின்மை நீடிக்கும்போது அது அவர்களின் மனநலனில் தேவையற்ற மாற்றங்களை உண்டாக்கும். மேலும், சுவாசப் பாதையில் ஈரப்பதம் குறைவதால் வறண்ட இருமல் மற்றும் அடிக்கடித் தொற்றுப் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மூளை வளர்ச்சியும் கற்றல் திறனும் :
சரியான முறையில் சுவாசிக்காதபோது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சீராகச் சென்றடைவதில்லை. இது குழந்தைகளின் கவனிக்கும் திறனைக் குறைத்து, கற்றல் குறைபாடுகளுக்கு (ADHD போன்ற அறிகுறிகள்) வழிவகுக்கும். போதுமான தூக்கம் இல்லாத குழந்தைகள் பகல் நேரங்களில் மிகவும் மந்தமாகவோ அல்லது ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியாத அதீத சுறுசுறுப்புடன் கவனச்சிதறலுடனோ காணப்படுவார்கள். பள்ளியில் குழந்தையின் செயல்பாடு குறையும்போது, அதன் பின்னணியில் இந்தச் சுவாசப் பிரச்சனை இருக்கக்கூடும் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.
பின்னணி காரணங்கள் என்ன..?
இயல்பாக மூச்சுவிட முடியாத ஒரு தடையை சுவாசப் பாதையில் எதிர்கொள்ளும் போதுதான் குழந்தை வாயைத் திறக்கிறது. இதற்கு ஆஸ்துமா, சைனஸ், அலர்ஜி போன்ற பொதுவான காரணங்கள் இருக்கலாம். அல்லது மூக்கு தசை வளர்ச்சி, சுவாசப் பாதை அடைப்பு, அடினாய்டு மற்றும் டான்சில்ஸ் வீக்கம் போன்ற மருத்துவக் காரணங்கள் இருக்கலாம். எனவே, குழந்தை வாய்வழியே சுவாசிப்பது தெரிந்தால், உடனடியாக ஒரு குழந்தைகள் நல மருத்துவரையோ அல்லது காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணரையோ அணுகி தகுந்த ஆலோசனையைப் பெறுவது அவசியம்.



