அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் த்ரிஷா. பின்னர், விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார்.
விஜய்யும்-த்ரிஷாவும் ஏறத்தாழ 14 வருடங்களுக்கு பிறகு திரையில் மீண்டும் சேர்ந்து லியோ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். த்ரிஷாவுக்கு நிழலாக இருப்பவர் அவரது தாய் உமா கிருஷ்ணன். பல வருடங்களாக தனது மகளுக்கு பக்க பலமாக நிற்கும் அவரைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், அவரது தந்தை கிருஷ்ணன் குறித்து பலருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து சில விஷயங்கள் வெளிவந்துள்ளது.
அதாவது, தனது மகள் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் தன்னுடைய உழைப்பில் தான் இருக்க வேண்டும் என கிருஷ்ணன் நினைக்கிறாராம். சில வருடங்களுக்கு முன்னர் வரைக்கூட சென்னை தி.நகரில் இருக்கும் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றினாராம். இவர்தான் த்ரிஷாவின் தந்தை என பலரும் அவர் காதுபட சொன்னாலும் அதை கண்டுகொள்ளமாட்டாராம் கிருஷ்ணன்.
பத்திரிகையாளர்கள் அந்த ஹோட்டலுக்கு சென்றால் ரொம்பவே கேஷுவலாக பேசுவாராம் கிருஷ்ணன். அப்போது த்ரிஷா குறித்து அவரிடம் கேட்டால், என்னிடம் அவளைப் பற்றி கேட்காதீங்க சார்.. த்ரிஷா பற்றி எதுவாக இருந்தாலும் அவளோட அம்மாட்ட கேட்டுக்கோங்க என கூறி நழுவிவிடுவாராம். ஒருவேளை த்ரிஷா நடிகையாக மாறியது அவரது தந்தைக்கு பிடிக்காமல் இருக்கலாம் என கூறி பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்தத் தகவல்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.