2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
ஆனால், தேமுதிகவுக்கு பாஜக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது கடினமாகும் என்பதால், உடனே கூட்டணியை அறிவிக்க வேண்டும் என பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தேமுதிக தரப்பில், பாஜக மேலிடத்தில் இருந்து தங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, திமுக கூட்டணியில் சேரவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தேமுதிகவை தங்களது கூட்டணியில் இணைக்க திமுகவுக்கு விருப்பம் இல்லையாம்.
ஆனால், விஜயகாந்த் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் சில சீட்டுகள் கொடுத்து கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் பாஜக, தேமுதிக மீது அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, தேமுதிக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.