ஆரோக்கியமான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது உணவு உண்ட பிறகு நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தான் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். செரிமான அமைப்பு மிகவும் நாசூக்கானது என்பதால், நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட நாளடைவில் ஜீரண சக்தியையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெகுவாகப் பாதித்துவிடும். அப்படி, நாம் சாப்பிட்டவுடன் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தண்ணீரும் தேநீரும் குடிக்க வேண்டாம் :
சாப்பிட்ட உடனேயே ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது மிகப்பெரிய தவறு. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது, வயிற்றில் உணவைச் செரிக்கச் சுரக்கும் அமிலங்களின் வீரியத்தைக் குறைத்து (நீர்த்துப் போகச் செய்து) விடுகிறது. இதனால் அஜீரணம் மற்றும் வாயுத் தொல்லைகள் ஏற்படுகின்றன. நிபுணர்களின் அறிவுரைப்படி, உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்போ அல்லது சாப்பிட்டு முடித்து 30 நிமிடங்களுக்குப் பிறகோ நீர் அருந்துவதே சிறந்தது. இதேபோல, சாப்பிட்டவுடன் டீ அல்லது காபி குடிப்பதும் கூடாது. இது உணவில் உள்ள இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. காலப்போக்கில் இது இரத்தசோகைக்கு கூட வழிவகுக்கலாம்.
உடனடியாக தூக்கம் மற்றும் புகைபிடித்தல் :
சாப்பிட்டவுடன் படுக்கையில் சாய்ந்து தூங்குவது செரிமானச் செயல்முறையை மிக மோசமாகப் பாதிக்கும். படுக்கும்போது, இரைப்பையில் உள்ள செரிமான அமிலம் மேல்நோக்கி வந்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும். மேலும், இந்தச் செயல் உடல் பருமன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதேபோல், சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது மிக மோசமான பழக்கம் ஆகும். மற்ற நேரங்களில் புகைபிடிப்பதை விட, சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது 10 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது செரிமானப் பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை நேரடியாக அதிகரிக்கிறது.
கடினமான உடற்பயிற்சி ஆகாது :
உணவு உட்கொண்ட உடனேயே ஜிம்முக்குச் செல்வது அல்லது கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானது. சாப்பிட்டவுடன், உடலின் இரத்த ஓட்டம் செரிமான உறுப்புகளை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது, இந்த இரத்த ஓட்டம் தசைகளை நோக்கித் திரும்பிவிடும். இதனால் ஜீரணம் தடைபட்டு, வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே, சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் கழித்துதான் கடினமான உடற்பயிற்சி செய்வது நல்லது. லேசான நடைப்பயிற்சியை மட்டும் மேற்கொள்ளலாம். இந்தச் சின்ன சின்ன மாற்றங்களைப் பின்பற்றுவது, செரிமான அமைப்பைப் பாதுகாத்து, நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.



