தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், மாம்பழ சீசன் களைகட்டியுள்ளது. மிகவும் இனிப்பான சுவை மிக்க இந்த மாம்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது. பொதுவாகவே மாம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். மாம்பழம் சாப்பிடுவதால் வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் சி, ஏ மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இருப்பினும், மாம்பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அப்படி எந்தெந்த உணவுகளோடு மாம்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மாம்பழம் – குளிர்பானங்கள்:
மாம்பழம் சாப்பிட்ட பிறகு சோடா அல்லது குளிர்பானங்கள் குடிக்கக் கூடாது. ஏனென்றால், இவை இரண்டிலும் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இப்படி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
காரமான உணவுகள் – மாம்பழம் :
காரமான உணவுடன் அல்லது அதற்குப் பிறகு மாம்பழத்தை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, இரண்டையும் சேர்த்து சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு நீண்ட இடைவெளி விட்டு மாம்பழம் சாப்பிடுங்கள்.
மாம்பழம்- பாகற்காய் :
பாகற்காய் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், மாம்பழம் சாப்பிட்ட பிறகு பாகற்காய் சாப்பிடுவது நல்லதல்ல. ஆயுர்வேதத்தின்படி, இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக உட்கொண்டால் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
மாம்பழம் – தயிர்:
மாம்பழம் மற்றும் தயிர் எந்த சூழ்நிலையிலும் ஒன்றாக சாப்பிடக் கூடாது. இந்த இரண்டின் கலவையும் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும். இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும், வயிறு உப்பசமடையும்.
தண்ணீர் – மாம்பழம்:
மாம்பழம் அல்லது வேறு ஏதேனும் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமானத்தை பாதிக்கும். இப்படி செய்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் தான் உணவு அல்லது பழங்களை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.