தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகே மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவாஹிர் என்பவரது மகன் முகமது ஷாம் (வயது 31). இவர், பட்டபடிப்புக்காக கடந்தாண்டு சென்னை சென்றார். அப்போது, அமைந்தக்கரை ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவரின் மகள் ரிஸ்வானா (21) என்பவருடன் முகமது ஷாமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர், இருவரும் காதலித்து வதனர்.
காதலித்தபோது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ரிஸ்வானாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் தனது காதலை முகமது ஷாம் துண்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரிஸ்வானா, தாங்கள் இருவரும் காதலித்தபோது, எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், அந்தப் புகைப்படங்களை முகமது ஷாம் பெற்றோருக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ஷாம் இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரிஸ்வானா, அவரது தந்தை அபுதாஹிர், தாய் அபிதா மற்றும் உறவினர் இப்ராஹிம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சென்னை போலீசாருக்கு மாற்றப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
முதலில் நன்றாக பழகிய அந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால், முகமது ஷாம் மெதுவாக அந்த பெண்ணிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் புகைப்படங்களை வைத்து மிரட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.