உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சட்டங்கள் அமலில் உள்ளன. சில சட்டங்கள் மனித வாழ்வை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அமையப்பட்டிருக்கின்றன; சில சட்டங்கள் சமூக நலனுக்காக; இன்னும் சில சட்டங்கள் கேட்கும்போதே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக, ஸ்பெயினின் தெற்குப் பகுதியிலுள்ள சிறிய நகரமான லாஞ்சரோன் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. காரணம் அந்த நகரத்தில் “இறப்பது சட்டவிரோதம்” என்ற வினோதமான விதி.
ஸ்பெயினின் கிரனாடா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைநகரம், தனது இயற்கை அழகு மற்றும் தூய்மையான நீரூற்றுகளுக்காக புகழ்பெற்றது. ஆனால் 1999 ஆம் ஆண்டில், அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ வெளியிட்ட ஆணையால், நகரம் உலக வரைபடத்தில் பிரபலமானது.
அந்த ஆணையில், “லாஞ்சரோன் நகர எல்லைக்குள் யாரும் இறக்கக் கூடாது” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கேட்கும்போது நகைச்சுவையாக தோன்றினாலும், அதன் பின்னால் இருந்த உண்மை மிகவும் சிந்திக்க வைக்கும் ஒன்று.
அந்த காலத்தில் லாஞ்சரோன் நகரில் புதிய கல்லறை (cemetery) அமைக்க இடம் இல்லை. பழைய கல்லறை முழுமையாக நிரம்பி விட்டது. புதிய நிலத்தை ஒதுக்க அரசாங்கம் தாமதித்தது. இதனால், மக்கள் இறந்தால் உடலை அடக்கம் செய்ய இடமின்றி கடும் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டுவரவும், பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்தவும், மேயர் “இறப்பது சட்டவிரோதம்” என்ற ஆணையை வெளியிட்டார்.
4,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த நகரம், கனிம வளமான நீரூற்றுகளுக்கும், சிகிச்சை ஸ்பாக்களுக்கும் பிரபலமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பார்சிலோனா மற்றும் மஜோர்கா போன்ற சுற்றுலா தலங்களுக்கு மாற்றாக, இந்நகரம் டிக்டாக்கில் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது.
லாஞ்சரோனின் நீரூற்றுகள் நூற்றாண்டுகளாக மருத்துவ நோக்கங்களுக்குப் பயன்பட்டு வருகிறது. 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஸ்பா, வாத நோய், செரிமான பிரச்சனைகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. இந்த நகரம் தனது கலாச்சாரத்திலும் தனித்துவம் காட்டுகிறது.



