குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தியில் இருந்த லிங்க்கை கிளிக் செய்ததால், தனியார் ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம் (40). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர், ஒரு நம்பரில் இருந்து பேசிய நபர், ”பிரபல தனியார் வங்கியின் மேலாளர் பேசுகிறேன். உங்களுக்கு வந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்கை தொட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசையாக பேசியுள்ளார். இதனை நம்பிய ரகுராமும், அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரகுராம், உடனடியாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த புகாரை அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அண்ணாநகர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ”ஆன்லைன் வாயிலாகவோ, செல்போன் மூலம் குறுந்தகவல் வந்தாலோ எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்து பார்க்கக் கூடாது என பலமுறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்துவருகிறோம். வங்கியின் மேலாளர் பேசுவதுபோல் பேசி தற்போது பணம் மோசடி செய்துள்ளனர். எனவே, ஆன்லைன் வாயிலாக வரும் குறுந்தகவல் மற்றும் லிங்க்கை தொட வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.